Translate

Friday, June 19, 2009

மழை நீர்?!

குடை கண்ணீர்
வடிக்கிறதே !
மழை நின்று
விட்டதென்றா?
வாசலில் வைத்து விட்டனர் என்றா?

Wednesday, June 17, 2009

மலரே!மலரே!

விடியலைத் தேடித் தேடி ...
தொலைந்தது இரவு ...
விடியலில்!
சின்ன கோடாய் கசிகிறது...
வெயில் ஜன்னல் வழி!
மெல்ல இதழ் விரித்துச்
சிரித்தது மலர்!
சற்று நேரத்திற்குள் ,
மேள தாளமாய் இடி !
மலருக்கு மஞ்சள் நீராட்டாம்..
சொட்டு சொட்டாய்
நனைக்கிறது மழை!
தளிர் இலையோ
தண்டுக்குக் குடை பிடித்தபடி!
மறுநாள் வாடும் மலருக்கு ,
இத்தனை மெநக்கெடலா ?
ஒரு கணம் புரியவில்லை!
விளையாட்டாய் பறித்தாள்..
ஐந்து வயது அத்தை மகள் ..
ஆசையாய் சூட...
அந்த கணம் புரிந்தது!
இறைவனின் இயற்கைப்
படைப்பு எனக்காக!
மலரும் சிரித்தது ...
மரண பயமின்றி!

Tuesday, June 16, 2009

கற்பனைக் குதிரை !

சண்டித்தனம் செய்யும்
கற்பனைக் குதிரையை ,
சுண்டி இழுத்துச் சரிக்கட்டி
ஓட விட்டால்....
பேனாவின் முனை மழுங்கியும்
நிறுத்த முடியவில்லை
தறிகெட்டு ஓடும் குதிரையை !
கொஞ்சம் நில் என்றால்...
இறந்து விடும் இந்த நொடிக்காய்
காத்திருப்பதில்லை காலம் !
அடுத்த நொடியை
பிரசவிக்கச் சென்று விடுகிறது
அவசரமாக என்றது!
அது வரை அமைதியாக
இருந்த மனம்...
அட இது என் கற்பனையா என
தாவிக் குதித்தது குரங்காய்!
அடுத்த நினைவிற்கு !
உண்மை தான்..
ஒவ்வொரு நொடியும் உயிர் வாழ்வதில்லை
ஒரு நொடிக்கு மேல்!
மனம் தாவிக் குதிக்க...இப்போது
இளைப்பாறிக் கொண்டிருக்கிறது குதிரை...
என் கற்பனைக் குதிரை!

Friday, June 12, 2009

செல்ல நாய் !

ஆளில்லா வீட்டில் ..
ஓடிக் களைத்து..
கத்திப் பின் ..
கண் செருக உறங்கி...
விழித்துப் பார்த்த ...
என்னை ...
சிவந்த கண்ணாய்..
கூர் நகம் கொண்டு ...
பற்கடிப்புடன்..
தலை விரி கோலமாய்..
இழுத்துக் கொண்டது..
தனிமை!!
நான்...!?
செல்ல நாய்க் குட்டியாம்!
காத்திருக்கிறேன் எஜமானன் வரவுக்காய்!


வினாக் கவிதை !

நழுவுகின்ற இந்த ஒரு
நொடியின் இறுதிப் புள்ளியில்...
தொக்கி நிற்கின்றன வினாக்கள்!
எதைக் கவிதையாக்க?..
எப்படி கவிதையாக்க?..
சிந்தனைச் சுரப்பு
வற்றி விடும் அந்த ஒரு
நொடியின் இறுதிப் புள்ளியில் ...
வினாக்களும் கவிதையாகின்றன!!